
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (மார்ச் 7) கடைசி நாளாகும்.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்காக தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) வழியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த நீட் நுழைவுத் தேர்வை ஆண்டுதோறும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
இந்நிலையில், வரும் கல்வியாண்டின் (2025-26) இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இணையவழி விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 7-ல் தொடங்கியது. இதுவரை சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (மார்ச் 7) கடைசி நாளாகும்.
இதைத் தொடர்ந்து, பதிவு செய்யப்பட்ட நீட் விண்ணப்பங்களில் நாளை மறுநாள் (மார்ச் 9) தொடங்கி மார்ச் 11 வரை திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது 011-40759000 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ விளக்கம் பெறலாம்.
நீட் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு மே 1-ல் வெளியிடப்பட்டு ஆங்கிலம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் மே 4-ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து ஜூன் 14-ல் முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.