
ஜிஎஸ்டி வரி விதிப்பில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றத்தால், கேரளம் ரூ. 8,000 கோடி முதல் ரூ. 10,000 கோடி வரை வருவாய் இழப்பைச் சந்திக்க நேரிடும் என அம்மாநில நிதியமைச்சர் பாலகோபால் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி விகிதம் 2 அடுக்குகளாகக் குறைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு அடுக்காக 40% என ஓர் அடுக்கு முன்மொழியப்பட்டுள்ளது. எனவே, பெரும்பாலான பொருள்கள் 18 சதவீதம் முதல் 5 சதவீதத்துக்குள் வருகிறது. 12% மற்றும் 28% ஆகிய இரு அடுக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல்வேறு அன்றாடப் பொருள்களின் விலை குறையவுள்ளன. இந்த நடைமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.
ஆனால், புதிய வரி விகிதத்தால் கேரளத்துக்கு ஆண்டுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி முதல் ரூ. 10 ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என அம்மாநில நிதியமைச்சர் பாலகோபால் தெரிவித்துள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"பொருள்களின் விலையைக் குறைக்கும் ஜிஎஸ்டி வரி விகிதக் குறைப்பை கேரளம் ஆதரிக்கிறது. ஆனால், மாநிலங்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.
சிமெண்ட், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்ஸ் மற்றும் காப்பீட்டுத் துறையில் மட்டும் ஆண்டுக்கு ரூ. 2,500 கோடி இழப்பு ஏற்படும்.
360-க்கும் மேற்பட்ட பொருள்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றத்தை எதிர்கொள்ளவுள்ளன. இதன் முழுத் தாக்கத்தை இன்னும் கணக்கிடவில்லை. ஆனால், கேரளத்துக்கு ஆண்டுக்கு ரூ. 8,000 கோடி முதல் ரூ. 10,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். முழுத் தாக்கத்தை இன்னும் கணக்கிடவில்லை.
ஜிஎஸ்டி முறையால் ஏற்படும் வருவாய் இழப்புகளுக்கு மத்திய அரசு இழப்பீடுகளை வழங்க வேண்டும். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண மத்திய அரசு மறுக்கிறது. மாநிலங்கள் எதிர்கொள்ளும் இழப்புகளுக்கு மத்திய அரசு இழப்பீடுகளை வழங்க வேண்டும்" என்றார் பாலகோபால்.
GST | GST Council | GST Rationalisation | Nirmala Sitharaman | Small Cars | Bike | Auto Spare Parts | Kerala | Kerala GST | Kerala Finance Minister | KN Balagopal |