
மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க உச்ச நீதிமன்றத்தால் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதை கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் விமர்சித்துள்ளார்.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் உள்பட தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டு வைத்திருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் 2023-ல் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், " சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது தொடர்பாக, மசோதா நிறைவேற்றப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் ஆளுநர்கள் முடிவு செய்யவேண்டும். சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக மூன்று மாதங்களுக்குள் ஆளுநர்கள் முடிவு செய்ய வேண்டும்" என்று தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் இதுதொடர்புடைய கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது:
"மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் எந்த காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை. ஆனால், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறினால், அது அரசியலமைப்புச் சட்டத் திருத்தமாகிறது. உச்ச நீதிமன்றத்தால் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனில், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தின் தேவை என்ன இருக்கிறது?
அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது நாடாளுமன்றத்தின் உரிமை. திருத்தம் மேற்கொள்ள 2/3 பெரும்பான்மை ஆதரவு தேவை. அரசியலமைப்பில் உள்ள அம்சங்களின் எதிர்காலத்தை இரு நீதிபதிகளால் தீர்மானிக்க முடியுமா? எனக்கு இது புரியவில்லை. இது நீதித் துறையின் அதிகார வரம்பு மீறல். அவர்கள் இதைச் செய்திருக்கக் கூடாது. நான் சொல்வது தவறாகக் கூட இருக்கலாம்" என்றார் கேரள ஆளுநர்.
கேரள ஆளுநரின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.