தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கடந்த மாதம் 21 அன்று கைது செய்யப்பட்டார்.
அமலாக்கத் துறை காவலில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார்.
கெஜ்ரிவாலை ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர் திஹார் சிறையில் அடைக்கப்படுகிறார்.
இந்நிலையில் தில்லி முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்வாரா? சிறையில் இருந்தபடியே அவர் முதல்வர் பணியைத் தொடருவாரா? கெஜ்ரிவால் பதவி விலகினால் அடுத்த முதல்வராகப் பதவியேற்கப் போவது யார்? எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.
முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக தில்லி ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நேற்று பேரணி மேற்கொண்டனர்.