
தவெக தலைவர் விஜயின் கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 10 லட்சம் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவு அறிவித்தார். இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
தவெக தரப்பில் உயிரிழந்தோருக்குத் தலா ரூ. 20 லட்சமும் காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 2 லட்சமும் அளிக்கப்படும் என விஜய் இன்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 2 லட்சம் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50 ஆயிரமும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.