பாஜகவில் இணைவதாக இருந்தால் சொல்கிறேன்: கமல்நாத்

சோனியா காந்தி குடும்பத்தைப் பிரிந்து கமல்நாத் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கக் கூடாது - திக்விஜய் சிங்
பாஜகவில் இணைவதாக இருந்தால் சொல்கிறேன்: கமல்நாத்
ANI
1 min read

பாஜகவில் இணையப்போவதாகத் தகவல் வெளியான நிலையில், அப்படி ஏதேனும் இருந்தால் நானே சொல்கிறேன் என மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் சனிக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றார். தனது மகனும், மக்களவை உறுப்பினரானுமான நகுல் நாத்துடன் தில்லி சென்றார். இதைத் தொடர்ந்து, கமல்நாத் பாஜகவில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் திக்விஜய் சிங்கிடம் இதுதொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது.

திக்விஜய் சிங் கூறுகையில், "கமல் நாத் சிந்த்வாராவில் இருக்கிறார். நேற்றிரவுதான் அவருடன் உரையாடினேன். நேரு-காந்தி குடும்பத்தினருடன் அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் கமல்நாத். ஒட்டுமொத்த ஜனதா கட்சியும் இந்திரா காந்தியைச் சிறையிலடைக்க முயற்சித்தபோதும்கூட அவர் உறுதுணையாக இருந்தார். இப்படிப்பட்ட நபர் சோனியா காந்தி, இந்திரா காந்தி குடும்பத்தினரைப் பிரிந்து செல்வார் என நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம். அப்படி எதிர்பார்க்கக் கூடாது" என்றார்.

மத்தியப் பிரதேசத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஜிதேந்திர சிங் கூறுகையில், "சஞ்சய் காந்தி (இந்திரா காந்தியின் மகன்) காலத்திலிருந்து கட்சிக்காக அவர் உழைத்துள்ளதைப் பார்க்கும்போது, காங்கிரஸிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைவார் என எனக்குத் தோன்றவில்லை" என்றார்.

இந்த நிலையில் கமல்நாத்திடம் இதுதொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது.

கமல்நாத் கூறுகையில், "எதற்காக இவ்வளவு ஆரவாரம்?. இதுவொன்றும் மறுப்பு தெரிவிப்பதற்கான விஷயமல்ல. இதுமாதிரி ஏதாவது இருந்தால் நானே உங்களிடம் தகவல் தெரிவிப்பேன்" என்றார் கமல்நாத்.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து கமல்நாத் நீக்கப்பட்டார். எனினும், தனது மகன் நகுல் மக்களவைத் தேர்தலில் சிந்த்வாரா தொகுதியிலிருந்து போட்டியிடுவார் என்பதை கமல்நாத் ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.

logo
Kizhakku News
kizhakkunews.in