
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து திரைத் துறையினரிடம் கருத்து கேட்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு முடிவு செய்துள்ளதாக குழுத் தலைவர் பிபி சௌதரி தெரிவித்துள்ளார்.
மக்களவை, மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்த ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கடந்தாண்டு டிசம்பரில் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறியும் இது தாக்கல் செய்யப்பட்டது. பிறகு, இந்த மசோதாவானது நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. பிபி சௌதரி தலைமையில் மக்களவையிலிருந்து 27 உறுப்பினர்கள், மாநிலங்களவையிலிருந்து 12 உறுப்பினர்கள் இதில் இடம்பெற்றுள்ளார்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து நாடு முழுக்க பல்வேறு தரப்பினரிடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழு கருத்துகள் கேட்டு வருகிறது. இந்தக் குழு மே 17 முதல் மே 22 வரை மும்பை மற்றும் டேராடுன் செல்கிறது. இந்தப் பயணத்தின்போது ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து திரைத் துறையினரிடமும் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டுக் குழுத் தலைவர் பிபி சௌதரி தி ஹிந்துவிடம் பேசுகையில், "தேர்தல் மற்றும் தேர்தல் சுழற்சி முறைகள் எல்லோரிடத்திலும் தாக்கத்தை உண்டாக்குகிறது. திரைத் துறையினர் உள்பட ஆர்வமிக்க பல்வேறு குழுக்களைச் சென்றடைவதே எங்களுடைய முயற்சி" என்றார். நாடாளுமன்றச் செயலகம் ஏற்கெனவே திரைத் துறையினரை அணுகத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. எனினும், திரைத் துறையைச் சேர்ந்த யாரெல்லாம் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் பேசவுள்ளார்கள் என்பது பற்றிய விவரம் இதுவரை வெளியாகவில்லை.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நான்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், இரு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தில்லி உயர் நீதிமன்றத்தின் இரு முன்னாள் நீதிபதிகள் மற்றும் ஹரிஷ் சால்வே மற்றும் அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்ட முக்கிய சட்ட வல்லுநர்களிடத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு கருத்து கேட்டுள்ளது. நாடு முழுக்கப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தக் குழு, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினரின் கருத்துகளையும் கேட்டறியும் என்று பிபி சௌதரி தெரிவித்துள்ளார்.
மும்பை பயணத்தின்போது ரிசர்வ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இதர வங்கிகளின் அதிகாரிகளிடமும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு கருத்து கேட்கவுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தலின் நடைமுறை சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டறிய மஹாராஷ்டிர தேர்தல் ஆணையத்தைச் சந்திக்கிறது.