பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்: ஜம்மு மக்கள் சொல்வது என்ன?

"நாங்கள் வெளியேறுவதற்காக அரசு சார்பில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால், எங்கு செல்வது எனத் தெரியவில்லை."
பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்: ஜம்மு மக்கள் சொல்வது என்ன?
ANI
1 min read

ஜம்மு-காஷ்மீரில் குப்வாரா, பூஞ்ச், ரஜௌரி பகுதிகளில் மே 8 இரவு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பல்வேறு குடியிருப்புக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக பாகிஸ்தான் தொடர்ந்து இரு நாள்களாக இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மே 8 இரவில் இந்தியாவின் மேற்குப் பகுதி எல்லை மாநிலங்களில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்தது. இவை அனைத்தும் இந்தியப் படைகளால் வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டன. இந்தியாவுக்கு உயிர்ச் சேதம் உள்பட எந்தச் சேதமும் இல்லை. போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி எல்லைக் கட்டுப்பாடு கோட்டைத் தாண்டியும் பாகிஸ்தான் தீவிரத் தாக்குதலை நடத்தியுள்ளது.

பூஞ்சில் தனியார் பள்ளியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி இன்று கூறினார். பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். பூஞ்ச் பகுதியில் தேவாலயத்தைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் குழந்தைகள் இருவர் உயிரிழந்ததாகவும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், "பாகிஸ்தான் என்ன நினைக்கிறது, என்ன செய்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. இது மனிதநேயம் மிக்க செயல் கிடையாது" என்றார். மேலும், "பூஞ்சில் குருத்வாரா, மசூதிகள், கோயில்கள் உள்ளிட்டவற்றை பாகிஸ்தான் ராணுவம் குறிவைக்கிரது. இது மிகத் தவறு. நாங்கள் இந்திய ராணுவம் மற்றும் மத்திய அரசுடன் துணை நிற்கிறோம்" என்றார்.

"நேற்றிரவு தாக்குதல் நடைபெற்றபோது, நாங்கள் சுமார் 200 பேர் பதுங்குக் குழிகளில் பதுங்கியிருந்தோம். அச்சம் நிலவி வந்தது. பல வீடுகள் சேதமடைந்தன. எனவே தான் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாறினார்கள். சிலர் காலையில் இடம்பெயர்ந்தார்கள். சிலர் வாகனங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். குழந்தைகள் பயத்தில் உள்ளார்கள். வீடுகள் சேதமடைந்து கால்நடைகள் உயிரிழந்தன" என்றார் உள்ளூர்வாசி.

மற்றொரு உள்ளூர்வாசி கூறுகையில், "இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை தாக்குதல் நடைபெற்றது. சில வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. 200 பேருடன் நாங்கள் பதுங்குக் குழிகளுக்குள் பதுங்கிக் கொண்டோம். எங்களுக்கு எங்கு செல்வது என்றே தெரியவில்லை. நாங்கள் வெளியேறுவதற்காக அரசு சார்பில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால், எங்கு செல்வது எனத் தெரியவில்லை. பாகிஸ்தானால் அப்பாவி மக்கள் குறிவைக்கப்படுகிறார்கள்" என்றார்.

இதனிடையே பஞ்ச்குலாவில் இன்று இரவு 7 மணி முதல் மறுஉத்தரவு வரும் வரை முற்றிலுமாக மின்சாரம் துண்டிக்கப்படும் என பஞ்ச்குலா நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in