
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் இன்று (ஏப்.28) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த வாரம் (ஏப்.22) நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பாக விவாதிக்க அந்த யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் சுரிந்தர் சௌதரி, பஹல்காம் தாக்குதல் குறித்த தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
அதில், `பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட காடுமிராண்டித்தனமான, மனிதாபிமானமற்ற தாக்குதல் குறித்து இந்த அவை அதிர்ச்சியையும், கவலையையும் வெளிப்படுத்துகிறது. அப்பாவி மக்களின் உயிர் பறிபோகக் காரணமான கோழைத்தனமான, கொடூரமான தாக்குதலை இந்த அவை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், தீவிரவாத தாக்குதல் சமயத்தில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்த சையது அடில் ஹுஸைன் ஷாவின் தியாகத்தை சட்டப்பேரவைத் தீர்மானம் அங்கீகரித்துள்ளது.
`சுற்றுலாப் பயணிகளைக் காக்க சையது அடில் ஹுஸைன் ஷா செய்த உயரிய தியாகத்தை இந்த அவை போற்றுகிறது. அவரின் துணிச்சல் மற்றும் தன்னலமில்லாத நடத்தை காஷ்மீரின் உண்மையான உணர்வை வெளிப்படுத்துகிறது. எதிர்கால சந்ததியினருக்கு இது நிச்சயமாக உத்வேகத்தை வழங்கும்’ என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தீர்மானம் மீது பேசிய முதல்வர் ஓமர் அப்துல்லா,
`பயங்கரவாதத்துக்கு எதிரான மக்கள் போரை எனது அரசு வலுப்படுத்தும். ஏனெனில் பொதுமக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே அதை தோற்கடிக்க முடியும். பயங்கரவாதத்திற்கு எதிரான மக்களின் சீற்றத்தைக் கருத்தில் கொண்டு, நாம் சரியான நடவடிக்கைகளை எடுத்தால், இதுவே அதன் முடிவின் தொடக்கமாக அமையும்.
மக்களை அந்நியப்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் நாம் மேற்கொள்ளக்கூடாது. துப்பாக்கியுடன் இருக்கும் பயங்கரவாதியை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் மக்கள் நம்முடன் இருந்தால் பயங்கரவாத்தை நம்மால் முடிவுக்குக் கொண்டுவர முடியும். அதற்கான நேரம் வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன்’ என்றார்.
இதை தொடர்ந்து, தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு, தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.