
இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் உள்ள பதுங்குக் குழிகளைத் தயார் செய்து வருவதாக அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகத் தொடங்கியுள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது. இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
போர்ப் பதற்றத்தை உணர்ந்து இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் வசித்து வரும் கிராம மக்கள் பதுங்குக் குழிகளைத் தயார் செய்யத் தொடங்கியுள்ளார்கள்.
கிராமவாசி ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "மக்கள் பதுங்குக் குழிகளை மறந்துவிட்டார்கள். பதுங்குக் குழிகள் தற்போது சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. ஒருவிதமான அச்சம் நிலவுகிறது. ஆனால், நல்லிணக்கமான சூழல் உருவாகும் என நம்புகிறோம்" என்றார் ஒருவர்.
மற்றொருவர் பேசுகையில், "நாங்கள் அரசுடன் துணை நிற்கிறோம். பயங்கரவாதத் தாக்குதலைக் கடுமையாக் கண்டிக்கிறோம். நம் ராணுவத்துக்கும் நிர்வாகத்துக்கும் ஆதரவாக இருக்கிறோம். அவர்களுக்கு எப்போது தேவையென்றாலும், எங்களால் முடிந்தளவுக்கு உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம். எங்களுடைய உயிரைத் தியாகம் செய்தாவது உதவியைச் செய்யத் தயாராக உள்ளோம். முன்பு இந்தப் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடக்கும். எல்லைக் கட்டுப்பாட்டு கோடுக்கு அருகில் தான் எங்களுடையக் கிராம் உள்ளது. எனவே, துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்தால், எங்களுடையக் குடும்பங்களை பதுங்குக் குழிகளில் பாதுகாப்பாக வைப்பதற்காக அவற்றைச் சுத்தம் செய்து வருகிறோம். இது மாதிரியான பதுங்குக் குழிகளை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி" என்றார் அவர்.
பூஞ்ச் மற்றும் ரஜௌரி போன்ற பாதிப்புகள் அதிகம் இருக்கும் இடங்களில் பதுங்குக் குழிகள் அமைக்க கடந்த காலங்களில் அரசு நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவியை அளித்துள்ளது. பதற்றமான சூழல் நிலவும் போதெல்லாம் மக்களைப் பாதுகாப்பதற்காக, பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு பதுங்குக் குழிகளை அமைக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எனவே, பெரும்பாலான பதுங்குக் குழிகள் "மோடி பதுங்குக் குழிகள்" என்றே குறிப்பிடப்படுகின்றன.