
84 வயதான இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்கோளாரால் காலமானார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன், வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இன்று (ஏப்.25) காலை 10.43 மணி அளவில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.
பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வரும் ஏப். 27 அன்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
சோதனை அடிப்படையில் இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட, இந்தியாவின் முதல் இரண்டு பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்களான பாஸ்கரா I மற்றும் II-ன் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய கஸ்தூரி ரங்கன், 1994 முதல் 2003 வரை, இஸ்ரோவின் தலைவராகவும், விண்வெளித்துறையின் செயலராகவும் பணியாற்றினார்.
அவரது தலைமையின் கீழ் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி. ராக்கெட், தற்போது வரை செயல்பாட்டில் உள்ளது. பணி ஓய்வு பெற்றபிறகு 2003 முதல் 2009 வரை மாநிலங்களவையின் நியமன உறுப்பினர் பதவியை வகித்த கஸ்தூரிரங்கன், அதன்பிறகு திட்ட கமிஷனின் உறுப்பினராக செயல்பட்டார்.
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தின் வேந்தர், கர்நாடகா அறிவுசார் ஆணையத்தின் தலைவர், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் குறித்த உயர்மட்ட பணிக்குழுவின் தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். அவரது தலைமையிலான குழு புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை கடந்த 2019-ல் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
விண்வெளித்துறைக்கு அவரது ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், நாட்டின் மிக உயரிய பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.