கருப்பாக இருப்பது அவமானமா?: கேரள தலைமைச் செயலாளர் உருக்கம்!

இதற்கு முன்பு இதே பதவியில் இருந்த என் கணவரை, என்னுடன் ஒப்பிடுவதைக் கண்டு நான் மிகவும் மனச்சோர்வடைந்தேன்.
கருப்பாக இருப்பது அவமானமா?: கேரள தலைமைச் செயலாளர் உருக்கம்!
1 min read

கருப்பாக இருப்பதால் தன் மீது சுமத்தப்படும் நிறப் பாகுபாடு குறித்த கருத்துகளுக்கு கேரள மாநில தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன் முகநூல் பதிவு வழியாக பதில் அளித்துள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரியான சாரதா முரளீதரன், தற்போது கேரளா மாநிலத்தின் 49-வது தலைமைச் செயலாளராக உள்ளார். இவருக்கு முன்பு இவரது கணவர் வி. வேணு 48-வது தலைமைச் செயலாளராக இருந்தார். இவர்கள் இருவருமே 1990-ம் வருடத்தில் ஐஏஎஸ் பணியில் இணைந்தவர்கள்.

இந்நிலையில், கருப்பாக இருப்பதால் தான் எதிர்கொண்ட நிறப்பாகுபாடு குறித்து தன் முகநூல் கணக்கில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,

`எனது தலைமைச் செயலாளர் பணி – என்னைப் போலவே கருப்பாக இருப்பதாகவும், எனது கணவருடையது வெள்ளையாக இருந்தாகவும் சுவாரஸ்யமான ஒரு கருத்தை நேற்று கேட்டேன். எனது கருப்பு எனக்கு மிகவும் அவசியமானது.

இந்த கருத்து என்னைக் காயமடைய செய்ததா என்றால், ஆம். இதற்கு முன்பு இதே பதவியில் இருந்த என் கணவரை, என்னுடன் ஒப்பிடுவதைக் கண்டு நான் மிகவும் மனச்சோர்வடைந்தேன்.

எதனால் கருப்பு நிறம் இழிவுபடுத்தப்படுகிறது? கருப்பு என்பது பிரபஞ்சத்தின் அனைத்திலும் பரவியிருக்கும் உண்மை. கருப்பு என்பது எதையும் உள்வாங்கிக் கொள்ளும் தன்மை உடையது. மனித குலம் உணர்ந்த சக்திகளில் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக கருப்பு உள்ளது. கருப்பு வண்ணம் அனைவருக்கும் பொருத்தமாக இருக்கும்.

அலுவலகத்திற்கான ஆடை, கண் மை, மழை எனப் பலவற்றில் கருப்பு நிறம் இருக்கிறது. கருப்பு என்பது நல்ல நிறம் இல்லை என்று கட்டமைக்கப்பட்ட பிம்பத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நான் புதைந்துவிட்டேன்.

இந்த நிலை என்னுடைய குழந்தைகளால் மாறியது. தங்களது கருப்பு பாரம்பரியத்தை அவர்கள் பெருமையாக உணர்ந்தார்கள். பிறரால் உணரமுடியாத அழகை, என் குழந்தைகள் அறிந்துகொண்டனர். கருப்பு என்பது மிகவும் அழகானது என்பதை அவர்கள் எனக்கு உணர்த்தினார்கள்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in