மனிதாபிமானமற்ற உத்தரவு: அலகாபாத் நீதிமன்றத்தை சாடிய உச்ச நீதிமன்றம்

பொதுவாக, இந்த நிலையில் நாங்கள் தடை உத்தரவு பிறப்பிப்பது இல்லை. ஆனால் இந்த கருத்துகள் சட்டத்திற்கு எதிராகவும், மனிதாபிமானமற்ற முறையிலும் உள்ளன.
மனிதாபிமானமற்ற உத்தரவு: அலகாபாத் நீதிமன்றத்தை சாடிய உச்ச நீதிமன்றம்
1 min read

பெண் குழந்தைகளின் மார்பகங்களைப் பிடிப்பதும், பைஜாமா நாடாக்களை அவிழ்ப்பதும் பாலியல் வன்கொடுமை குற்றமாகாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

உ.பி. மாநிலத்தில், 11 வயது பெண் குழந்தையை, பவன் மற்றும் ஆகாஷ் என்ற இரு நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது குறித்து, அண்மையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா விசாரித்தார். அப்போது, பெண் குழந்தைகளின் மார்பகங்களைப் பிடிப்பதும், பைஜாமா நாடாக்களை அவிழ்ப்பதும் பாலியல் வன்கொடுமை குற்றமாகாது என்று அவர் கருத்து தெரிவித்தார்.

அலகாபாத் நீதிபதியின் கருத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இது குறித்து விரிவாக விசாரணை நடத்திய நீதிபதிகள் பி.ஆர். கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வு, `பொதுவாக, இந்த நிலையில் நாங்கள் தடை உத்தரவு பிறப்பிப்பது இல்லை. ஆனால் 21, 24 மற்றும் 26-ம் பத்திகளில் கூறப்பட்டுள்ள கருத்துகள் சட்டத்திற்கு எதிராகவும், மனிதாபிமானமற்ற முறையிலும் உள்ளன. இதனால் அவற்றுக்கு தடை பிறப்பிக்கிறோம்’ என்று உத்தரவிட்டது.

மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் உத்தர பிரதேச மாநில அரசிடம் விளக்கம் கோரியுள்ளது உச்ச நீதிமன்றம்.

`மத்திய அரசுக்கும், உத்தர பிரதேச அரசுக்கும், இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்திற்கு முன்பு உள்ள கட்சிக்காரர்களுக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கிறோம். அரசு தலைமை வழக்கறிஞரும், கூடுதல் தலைமை வழக்கறிஞரும் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவுவார்கள்’ என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in