
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்து வருகிறார்.
செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்குவதற்கு முன்பு, 2001 நாடாளுமன்றத் தாக்குதல், 2002 அக்ஷர்தம் தாக்குதல், 2008 மும்பை தாக்குதல், 2016 உரி தாக்குதல், 2019 புல்வாமா தாக்குதல், பஹல்காம் தாக்குதல் ஆகியவை குறித்த காணொளிகள் ஒளிபரப்பாகின.
இதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது,
`கடந்த ஏப்ரல் 22-ல் பஹல்காமில் இந்திய சுற்றுலாப் பயணிகள், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் என 26 பேர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதல் மிகவும் கொடூரமானது. சுற்றுலா வந்தவர்கள் குடும்பத்தினரின் கண் முன்னே பயங்கரவாதிகள் கொடூரமான கொலைச் சம்பவத்தை நடத்தினார்கள்.
இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானில் பயிற்சி மேற்கொண்ட பயங்கரவாதிகள் ஈடுபட்டதை இந்தியா உறுதி செய்துள்ளது. அவர்களின் துல்லியமான புகைப்படங்களை உளவுத்துறை வெளியிட்டது.
கடந்த 2008 நவம்பரில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் உள்நாட்டில் பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக பஹல்காம் உள்ளது. இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா ஆதரவு பெற்ற ‘ரெசிஸ்டென்ட் ஃப்ரண்ட்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் திரும்பிவரும் இயல்பு நிலையை சிதைக்கவும், வளர்ந்துவரும் சுற்றுலாத் துறையை முடக்கவும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து அங்கு நிலவும் அமைதியைக் குலைக்கவும், மதக் கலவரங்களைத் தூண்டவும் திட்டமிட்டு இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களின் புகலிடமாக இருக்கிறது என்பது ஏற்கனவே உலகம் அறிந்த விஷயமே. பாகிஸ்தான் தனது நாட்டு எல்லைக்குள்ளேயே பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை இந்தியாவும் ஐ.நா. சபையில் பல்வேறு தருணங்களில் எடுத்துக்கூறி கண்டித்துள்ளது.
இந்தச் சூழலில்தான் பஹல்காம் தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலுக்கு அடுத்த நாளே பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், அந்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினை ஆற்றுவதும், குற்றச்சாட்டுகளை மறுப்பதும், பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதுமாக பாகிஸ்தான் செயல்பட்டது.
இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் நடந்த 15 நாட்களுக்குப் பிறகு திட்டமிட்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை நேர்த்தியாகக் குறிவைத்து, தாக்குதல் நடத்தியுள்ளோம். அங்குள்ள 9 முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன’ என்றார்.
அதன்பிறகு, ராணுவத்தைச் சேர்ந்த சோஃபியா குரேஷி மற்றும் விமானப்படையைச் சேர்ந்த வியோம்கா சிங் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விளக்கமளித்தனர். அவர்கள் கூறியதாவது,
`பஹல்காமில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்திய பாதுகாப்புப் படைகள் ஆபரேஷன் சிந்தூரை நடத்தின.
இந்த தாக்குதலில், 9 பயங்கரவாத முகாம்கள் வெற்றிகரமாகத் தாக்கி அழிக்கப்பட்டன. கடந்த மூன்று தசாப்தங்களாக பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதிகளுக்கான பயிற்சி மையமாக அவை செயல்பட்டுள்ளன.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் என இரு பகுதிகளிலும் இந்த முகாம்கள் உள்ளன. வடக்கில் சவாய் நாளாவில் தொடங்கி தெற்கில் பஹவல்பூர் வரை 21 பயங்கரவாத முகாம்கள் உள்ளன.
நம்பகத்தன்மைகொண்ட உளவுத் தகவல்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இவை ஆற்றிய பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் இலக்குகள் தேர்தெடுக்கப்பட்டன. மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு எந்த பாதிப்பு ஏற்படாத வகையிலும், பொதுமக்களிடையே உயிரிழப்புகள் ஏற்படுத்தாத வகையிலும் இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக மிகவும் கவனமான வகையில் ஆயுதங்கள் தேர்தெடுக்கப்பட்டன. குறிப்பிட்ட கட்டடம் அல்லது அருகருகே உள்ள கட்டடங்கள் இலக்காக்கப்பட்டன. அனைத்து இலக்குகளும் துல்லியமாக அழிக்கப்பட்டதன் மூலம், இந்திய ராணுவத்தின் செயல்திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ராணுவ முகாம்கள் மீது எந்த தாக்குதலும் நடைபெறவில்லை. பதில் தாக்குதல் நடத்துவதில் இந்திய ராணுவம் கணிசமான கட்டுப்பாடுகளைக் கடைபிடித்துள்ளது. வருங்காலத்தில் ராணுவ நடவடிக்கைகளில் பாகிஸ்தான் இறங்கினால், அதற்கு தக்க பதிலடி வழங்க இந்திய பாதுகாப்புப்படைகள் தயாராக உள்ளன’ என்றனர்.
செய்தியாளர்கள் சந்திப்புக்கு இடையே இந்திய விமானப்படை விமானங்கள் மேற்கொண்ட தாக்குதல் காணொளிகள் வெளியிடப்பட்டன.