
பாகிஸ்தானுடனான அட்டாரி-வாகா எல்லைப் பகுதியை மூட பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தைச் சேர்ந்த பஹல்காம் பகுதியில் நேற்று (ஏப்.22) நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, சௌதி அரேபியா சுற்றுப்பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு இன்று (ஏப்.23) காலை பிரதமர் மோடி இந்தியாவுக்குத் திரும்பினார். இதற்கிடையே, நேற்று ஸ்ரீநகருக்குச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று காலை தாக்குதல் நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்டார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இதில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்,
1) இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லைப்பகுதி மூடப்படும்.
2) பாகிஸ்தானியர்களுக்கான இந்திய விசா நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
3) பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.
4) தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை ஒரு வாரத்தில் காலி செய்ய அவகாசம் வழங்கப்படும்.
5) பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளைத் திரும்ப அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க சுற்றுப் பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு, தில்லிக்குத் திரும்பி வந்துகொண்டிருப்பதால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.