

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்திற்கு நடுவே இந்தியக் கொடியுடன் கூடிய மற்றுமொரு கப்பல் குஜராத்துக்கு வருகை தந்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய பாதையாக உள்ள ஹார்முஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அதற்கு தொடர்புள்ள நாடுகளின் கப்பல்களுக்குத் தடை விதித்துள்ளது. ஆனால், இந்திய வெளியுறவு அமைச்சரின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக இந்திய கொடியுடன் கூடிய சரக்கு கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிவாலிக், நந்தா தேவி என்ற இரு கப்பல்கள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளன.
கப்பலிலிருந்து இறக்கும் பணிகள் தீவிரம்
இதனிடையே நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கப்பல்துறை சிறப்புச் செயலாளர் ராஜேஷ்குமார் சின்ஹா, “நமது கப்பல்கள் மற்றும் கடற்படையினர் அனைவரும் வளைகுடா பகுதிகளில் பாதுகாப்பாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், வளைகுடா பகுதிகளில் இருந்து 161 இந்திய மாலுமிகள் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளனர்.தற்போது சிவாலிக், நந்தா தேவி இரு கப்பல்களில் இருந்தும் சமையல் எரிவாயு உள்ளிட்ட சரக்குகளை இறக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நந்தா தேவி கப்பலில் இருந்து சிறிய கப்பலுக்குப் பொருள்கள் மாற்றப்பட்டுக் கரைக்குக் கொண்டு வரப்படுகின்றன” என்று தெரிவித்திருந்தார்.
புதிய கப்பல் இந்தியா வருகை
இந்நிலையில், இன்று 80,886 மெட்ரிக் டன்கள் கச்சா எண்ணெய்யுடன் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்திய கொடியுடன் கூடிய ஜக் லாட்கி என்ற கப்பல் குஜராத் மாநிலம் முந்த்ராவில் உள்ள அதானி துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. நாட்டின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு கச்சா எண்ணெய் வழங்கி வரும் அதானி நிறுவனங்களின் துறைமுகத்திற்கு வந்திருக்கும் இந்தக் கப்பல், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
கடந்த மார்ச் 14 அன்று ஜக் லாட்கி கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்தின் புஹைரா துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டிருந்தபோது, அந்தத் துறைமுகத்தின் எண்ணெய் முனையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் கப்பல் பத்திரமாக இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுவது தொடர்பான பதற்றம் நிலவிய நிலையில், இன்று காலை 10:30 மணி அளவில் குஜராத் முந்த்ரா துறைமுகத்திற்குக் கப்பல் வந்துள்ளது.
Amidst the war tensions in the Middle East, another ship flying the Indian flag has arrived in Gujarat.