
ஜம்மு காஷ்மீர் ரம்பான் மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு சம்பவத்தை அடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய ராணுவம், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் ரம்பான் மாவட்டத்தில் நேற்று (ஏப்.20) ஏற்பட்ட மேகவெடிப்பு சம்பவத்தால் பலத்த மழை பெய்தது. இதனால் அம்மாவட்டத்தின் பல இடங்கில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. செரி பக்னா, தரம் குந்த் போன்ற கிராமங்களில் வீடுகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன.
கனமழை மற்றும் வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட காரணத்தால், நஷ்ரி-பனிஹால் இடையிலான ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, கள நிலவரம் குறித்த தகவல் கிடைத்ததும், மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிகளைச் செய்யவும், நெடுஞ்சாலையில் போக்குவரத்தை சீரமைக்கவும் உடனடியாக ராணுவம் களமிறங்கியுள்ளது.
தனியார் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து சாலைகளை சீரமைக்கும் பணியைத் தொடங்கியது மட்டுமல்லாமல், போக்குவரத்து பாதிப்பால் நெடுஞ்சாலையில் சிக்கியுள்ள பயணிகளுக்கு குடிநீர், உணவு, தேநீர் மற்றும் மருந்துகளையும் ராணுவத்தினர் வழங்கியுள்ளனர்.
இயல்பு நிலை திரும்பி, போக்குவரத்து சகஜமாக 48 மணிநேரம் வரை ஆகும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. கனமழை தொடர்பான வானிலை முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்படும் அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.