பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: பஞ்சாபில் மூவர் காயம்

பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு இடங்களில் மின்சாரம் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: பஞ்சாபில் மூவர் காயம்
Adnan Abidi
2 min read

இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள மாநிலங்களில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதலை நடத்தி வருவதாகச் செய்திகள் வருகின்றன.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, கடந்த மூன்று நாள்களாக இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

குறிப்பாக மே 8 அன்று இரவு இந்தியாவின் மேற்குப் பகுதிகளிலுள்ள மாநிலங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் கடுமையான தாக்குதலை நடத்தியது. மேலும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே கனரக ஆயுதங்களைக் கொண்டு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. பாகிஸ்தானின் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜம்மு, பஞ்சாபில் சில பகுதிகளில் நேற்று இரவு மின்சாரம் முழுமையாகத் துண்டிக்கப்பட்டன. அபாய எச்சரிக்கைகள் ஒலிக்கப்பட்டன.

இன்று (மே 9) இரவும் இதே நிலை மீண்டும் தொடர்கிறது. மேற்கு எல்லைப் பகுதிகளிலுள்ள மாநிலங்களில் பாகிஸ்தான் தாக்குதலை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக பஞ்சாபில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு குடும்பத்தினர் காயமடைந்துள்ளார்கள். ஃபெரோஸ்பூர் எஸ்எஸ்பி பூபிந்தர் சிங் சித்து கூறுகையில், "3 காயமடைந்திருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்களுக்குத் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகிறார்கள். பெரும்பாலான ட்ரோன்கள் இந்திய ராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டன" என்றார். ஃபெரோஸ்பூர் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.

மருத்துவர் கமல் பாகி கூறுகையில், "ட்ரோன் குண்டு மூலம் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளார்கள். இதில் ஒரு பெண் உடல்நிலை மோசமாக உள்ளது. அவருக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. மற்றவர்களுக்கு குறைந்த அளவிலான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக சிகிச்சையைத் தொடங்கிவிட்டோம். மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்" என்றார் அவர்.

ராஜஸ்தானிலும் ட்ரோன் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதை இந்தியா தாக்கி அழித்துள்ளதாகவே கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. குஜராத்திலும் பாடன் மாவட்டத்தில் சன்டால்பூர் தாலுக்காவை ஒட்டியுள்ள கிராமங்களில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக குஜராத் முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அக்னூர், பதன்கோட், உதம்பூர், ரஜௌரி மற்றும் நாக்ரோடா ஆகிய பகுதிகளிலும் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹரியாணாவில் அம்பாலா மற்றும் பஞ்ச்குலா பகுதிகளில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. பஞ்சாபில் ஃபெரோஸ்பூரில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் ஜெய்சால்மெரில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீநகரிலும் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியாகின்றன.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் முப்படைத் தளபதிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in