
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலின் எதிரோலியாக, பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ விசாக்கள் உள்ளிட்ட அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாகவும், பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்கும் நடைமுறையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படும் வகையில், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து விசாக்களும் வரும் ஏப்ரல் 27 முதல் ரத்து செய்யப்படுவதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனிதநேய அடிப்படையில் மருத்துவ விசாக்கள் நீட்டிக்கப்படும். ஆனால் மருத்துவ விசாக்களுக்கு இரு நாட்கள் அவகாசம் கூடுதலாக வழங்கப்பட்டு, அவை ஏப்ரல் 29 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
`பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கிய செல்லுபடியாகும் அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்படுகின்றன. பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ விசாக்கள் ஏப்ரல் 29, 2025 வரை மட்டுமே செல்லுபடியாகும். தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் விசாக்கள் காலாவதியாகும் முன்பு இந்தியாவில் இருந்து வெளியேறவேண்டும்’ என்று மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய குடிமக்கள் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், பாகிஸ்தானில் இருக்கும் இந்திய குடிமக்கள் விரைவில் நாடு திரும்புமாறும் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டம் நேற்று நிறைவடைந்த பிறகு, அது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, `சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு வர பாகிஸ்தானியர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்’ என்று தெரிவித்தார்.