
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா மீது தாக்குதலைத் தொடர்ந்துள்ள பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடியைக் கொடுக்கத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து தாக்கி அழிக்கப்பட்டன. 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடி தரும் விதமாக இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லையை ஒட்டியுள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
மே 7 இரவில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இந்தியாவில் ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சித்தது. இந்தியாவின் வான்வழிப் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் இவை அனைத்தும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன. இதற்குப் பதிலடி தரும் விதமாக மே 8 காலையில் பாகிஸ்தானிலுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது.
இந்தப் பதற்றம் மேலும் அதிகரிக்கும் விதமாக மே 8 இரவில் பாகிஸ்தான் தாக்குதலைத் தொடங்கியது. ஜம்முவில் விமான நிலையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதுதவிர பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களிலும் ஏவுகணை, ட்ரோன் மற்றும் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சித்துள்ளது. இவை அனைத்தையும் இந்தியப் படைகள் வெற்றிகரமாகத் தகர்த்து வருகின்றன. குறிப்பாக பாகிஸ்தானின் மூன்று போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் எஃப் 16 ரக போர் விமானமும் அடக்கம். இந்தியா தரப்பில் எந்தச் சேதமும் இல்லை.
இந்தத் தாக்குதல் காரணமாக பஞ்சாபில் அமிருதசர், ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உச்சகட்ட கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்து பொற்கோயில், தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்களுக்குப் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளன. தரம்சாலாவில் பஞ்சாப் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ் இடையிலான ஐபிஎல் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டன.
பாகிஸ்தான் தாக்குதல்களுக்குப் பதிலடி தரும் விதமாக இந்தியா தாக்குதல்களைத் தொடர்ந்துள்ளது. முதற்கட்டமாக சியால்கோட் பகுதியில் இந்தியா தீவிரத் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்லாமாபாத், லாகூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த இந்தியா முற்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லாகூரில் ஆளில்லா விமானம் மூலம் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
"ஜம்மு, பதன்கோட் மற்றும் உதம்பூரிலுள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஜம்மு-காஷ்மீரிலும் சர்வதேச எல்லை தாண்டி தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது. இவை அனைத்தும் தாக்கி அழிக்கப்பட்டன. இந்தியாவுக்கு இதனால் உயிர்ச் சேதம் உள்பட எந்தச் சேதமும் இல்லை" என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்சால்மெர் எல்லையில் இந்தியாவால் சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானத்திலிருந்து வெளியேறிய பாகிஸ்தான் விமானி ராஜஸ்தானில் பிடிபட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான போர் பதற்றம் படிப்படியாக அடுத்தடுத்த நிலையை அடைந்து வருகிறது.