
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் முகாம்களைக் குறிவைத்து ஆப்ரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது.
நள்ளிரவு 1.44 மணியளவில் ஏவப்பட்ட ஏவுகணைகள் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்கியுள்ளன. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள். 12 பேர் படுகாயம்.
பாகிஸ்தான் ராணுவத் தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை. பஹல்காம் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் 4 பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 பகுதிகளிலும் என சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர் போன்ற 9 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்திய ராணுவம், வான்படை, கடற்படை இணைந்து இத்தாக்குதலை நிகழ்த்தியுள்ளன. இரவு முழுக்க இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை பிரதமர் மோடி கண்காணித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூர் - நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது, ஜெய் ஹிந்த் என்று இந்திய ராணுவத் தரப்பில் இத்தாக்குதலுக்கு எக்ஸ் தளத்தில் பதிவு எழுதப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவரங்களை இன்று காலை 10 மணிக்கு மத்தியப் பாதுகாப்புத்துறை வெளியிடவுள்ளது.
இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் காலை 11 மணிக்கு பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக இந்தத் தாக்குதலுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெண்கள் நெற்றியில் வைக்கப்படும் குங்குமத்தைக் குறிப்பதற்காக ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.