
26 ரஃபேல் கடற்படை போர் விமானங்களை வாங்க ரூ. 63,000 கோடி மதிப்பீட்டில் இந்தியா-பிரான்ஸ் இடையே இன்று (ஏப்.28) ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
ரூ. 64,000 கோடிக்கு பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் கடற்படை போர் விமானங்களை வாங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கடந்த ஏப்ரல் 9-ல் ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், இது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் இன்று (ஏப்.28) கையெழுத்தாகவுள்ளது.
இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதரும், மத்திய பாதுகாப்பு செயலர் ராஜேஷ் குமார் சிங்கும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர். முன்னதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதாக இருந்தது, ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், 22 ஒற்றை இருக்கை மற்றும் 4 இரட்டை இருக்கை பயிற்சி விமானங்களை பிரான்ஸிடம் இருந்து இந்தியா வாங்குகிறது. ஏற்கனவே இந்தியா வசம் 36 ரஃபேல் விமானங்கள் இருக்கும் நிலையில், இந்த எண்ணிக்கை 62 ஆக உயரும்.
இந்த ரஃபேல் போர் விமானங்கள், பழைய மிக்-29கே ரக போர் விமானங்களுடன் சேர்த்து, ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர் கப்பல்களிலிலிருந்து இந்திய கடற்படையால் இயக்கப்படும்.
அதிகபட்சமாக 2031-க்குள் 26 ரஃபேல் போர் விமானங்களும் இந்தியா வசம் வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பிரான்ஸிடமிருந்து ரூ. 33,500 கோடியில் 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிப் போர்க்கப்பல்கள் வாங்கும் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் நிலையில் உள்ளது.