பாகிஸ்தான் தாக்குதல்களை முறியடித்த இந்தியா: விடிய விடிய நடந்தது என்ன?

இஸ்லாமாபாத், லாகூர், சியால்கோட், கராச்சி போன்ற நகரங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்புப் பணியில் இந்திய ராணுவ வீரர்கள்
பாதுகாப்புப் பணியில் இந்திய ராணுவ வீரர்கள்ANI
1 min read

இந்தியாவை நோக்கி நேற்று (மே 8) இரவு தொடங்கி பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளால் ஏவப்பட்ட ஏவுகணைகளையும், டிரோன்களையும் இந்திய பாதுகாப்புப் படைகள் வீழ்த்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்திய ராணுவம் இன்று (மே 9) காலை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது,

`மே 8 மற்றும் 9-க்கு இடைப்பட்ட இரவு நேரத்தில் மேற்கு எல்லைப்பகுதியில் டிரோன்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்களை உபயோகித்து பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் தாக்குதல்களில் ஈடுபட்டன. ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படைகள் தாக்கின.

டிரோன் தாக்குதல்கள் திறம்பட முறியடிக்கப்பட்டன, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே நடந்த அத்துமீறல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது.

நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது. அனைத்துவிதமான தீய நோக்கங்களுக்கும் பதிலடி கொடுக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், நக்ரோட்டா (ஜம்மு-காஷ்மீர்) மற்றும் பதான்கோட் (பஞ்சாப்) ஆகிய பகுதிகளை நோக்கி பாகிஸ்தானால் ஏவப்பட்ட 50-க்கும் மேற்பட்ட டிரோன்களை, இந்திய​​ ராணுவம் வீழ்த்தியுள்ளது. இது தொடர்பான காணொளிகள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மரில் உள்ள ராம்கரில் அமைந்துள்ள எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) முகாமைக் குறிவைத்து இன்று (மே 9) அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை டிரோன் தாக்குதல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டது. இந்திய பாதுகாப்புப் படைகளால் இது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அந்நாட்டின் முக்கிய நகரங்களில் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அந்நாட்டின் சியால்கோட், லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் குழப்பம் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் பதிலடியைத் தொடர்ந்து, பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு பாகிஸ்தான் அரசு அறிவுறுத்தியுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இஸ்லாமாபாத், லாகூர், சியால்கோட், கராச்சி போன்ற நகரங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு எல்லை பகுதியில் நேற்று (மே 8) இரவு அத்துமீறி பறந்த பாகிஸ்தான் விமானப் படையின் எப்-16 ரக போர் விமானத்தையும், எப்ஜே-17 ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்களையும் இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தின.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in