இந்தியத் துறைமுகங்களில் பாக். கப்பல்களுக்குத் தடை

இந்தியக் கப்பல்களும் பாகிஸ்தான் துறைமுகங்களில் நுழையாது.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

இந்தியத் துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்கள் நுழையவும் பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்தியக் கப்பல்கள் நுழையவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த மாதம் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தார்கள். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியத் தூதரக அதிகாரிகளைத் திரும்ப அழைப்பது, வாகா எல்லையை மூடுவது, பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனப் பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் தரப்பிலிருந்தும் சிம்லா ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, பாகிஸ்தான் நடிகர்கள், ஊடகங்களின் சமூக ஊடகப் பக்கங்களை மத்திய அரசு முடக்கத் தொடங்கியது. பாகிஸ்தான் நடிகர் ஃபவத் கான் படம் மே 9 அன்று இந்தியாவில் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான தவறான கருத்துகளைப் பரப்புவதாகச் சொல்லி டான் நியூஸ், ஜியோ நியூஸ் உள்ளிட்ட யூடியூப் சேனல்களுக்கு இந்தியா தடை விதித்தது.

பாபர் ஆஸம், ஷஹீன் அஃப்ரிடி உள்ளிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டன.

இந்நிலையில், இந்தியத் துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி பறக்கும் கப்பல்கள் நுழையத் தடை விதித்து மத்திய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மெர்சன்ட் ஷிப்பிங் சட்டம், 1958-ல் பிரிவு எண் 411-ன் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை இது நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கப்பல்கள் எதுவும் பாகிஸ்தான் துறைமுகங்களில் நுழையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த உத்தரவிலிருந்து ஏதேனும் விலக்கும் தேவைப்பட்டால், தனிப்பட்ட விவகாரங்களைப் பொறுத்து முடிவெடுக்கப்படவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in