
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுக்கும், இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் எதிராக வெறுப்பைத் துண்டும் வகையிலும், சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் போலிச் செய்திகளைப் பரப்பியதால், 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்குத் தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்பேரில் இந்த 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்குத் தடை விதிக்கப்பட்டிள்ளது. டான் நியூஸ், இர்ஷாத் பாட்டி, சமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், பிஓஎல் நியூஸ், ஜியோ நியூஸ், சமா ஸ்போர்ட்ஸ், அஸ்மா ஷிராஸி, உமர் சீமா, முனீப் ஃபரூக், சுனோ நியூஸ் உள்ளிட்ட இந்த 16 சேனல்களை ஒட்டுமொத்தமாக 6.30 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.
இது மட்டுமல்லாமல், பஹல்காம் தாக்குதல் குறித்துப் போலியான தகவல்களை வெளியிட்ட சமூக வலைதளப் பதிவுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக, மிகவும் குறிப்பாக தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளைக் குறிப்பிட பிபிசி செய்திகளில் உபயோகிக்கப்பட்ட வார்த்தைகளை முன்வைத்து அந்நிறுவனத்திடம் மத்திய அரசு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிபிசி வெளியிடும் செய்திகள் தொடர்ந்து அரசால் கண்காணிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தேசப் பாதுகாப்பிற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பரப்பப்படும் போலிச் செய்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையால் விசாரணை தொடங்கப்பட்டு 2 நாட்கள் கழித்து, பாகிஸ்தான் யூடியூப் சேனல்களை மத்திய அரசு தடைசெய்துள்ளது.