
ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்த கிருஷ்ணமூர்த்தி வி. சுப்பிரமணியன் நீக்கப்பட்ட நிலையில், அவர் எழுதிய புத்தகத்தின் இரண்டு லட்சம் பிரதிகள் பொதுத்துறை வங்கியால் கொள்முதல் செய்யப்பட்டது குறித்த விசாரணை தொடங்கியுள்ளது.
கடந்த 2018 முதல் 2021 வரை மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி வி. சுப்பிரமணியன் செயல்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 2022-ல், சர்வதேச நாணய நிதியத்தின் இந்தியப் பிரதிநிதியாக மூன்றாண்டு காலத்திற்கு இவர் நியமிக்கப்பட்டார்.
கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனின் ஐஎம்எஃப் பதவிக்காலம் நிறைவடைய 6 மாதங்கள் உள்ள நிலையில், திடீரென அந்த பதவியில் இருந்து மத்திய அரசால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தற்போது நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள பரமேஷ்வரன் ஐயர், அந்த பொறுப்பிற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவியில் இருந்து கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் விடுவிக்கப்பட்டதற்கு, அவரது `இந்தியா @100: நாளைய பொருளாதார சக்தி மையத்திற்கான முன்னோட்டம்’ (India @100: Envisioning Tomorrow's Economic Powerhouse) என்ற புத்தகம் தொடர்பாக நடைபெற்ற கொள்முதல் முறைகேடு காரணமாகக் கூறப்படுகிறது.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, இவரது இந்த புத்தகத்தின் சுமார் இரண்டு லட்சம் பிரதிகளை, சுமார் ரூ. 7.25 கோடிக்கு கொள்முதல் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள், பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்களுக்கு வழங்கும் வகையில் இந்த புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணை வங்கி மட்டத்தில் நடைபெற்று வருகிறது.
மேலும், ஐஎம்எஃப் அமைப்பால் பராமரிக்கப்படும் தரவுகள் தொடர்பாக, அந்த அமைப்பிற்கு பல்வேறு கேள்விகளை அண்மையில் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் எழுப்பினார். எனவே இதன் காரணமாகவும் இந்த விடுவிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.