தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக்கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

`உங்களுக்கு வேண்டுமென்றால் ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள்’.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக்கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்
1 min read

மும்மொழிக் கொள்கை திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த உத்தரவிடக்கோரிய பொது நல வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று (மே 9) தள்ளுபடி செய்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அங்கமாக மும்மொழிக் கொள்கை உள்ளது. பள்ளிகளில் கட்டாயமாக மூன்று மொழிப் பாடங்களை பயிற்றுவிப்பது மும்மொழிக் கொள்கை திட்டத்தின் சாரம்சமாகும். தமிழகத்தில் மும்மொழிக்கொள்கை அமல்படுத்தப்படமாட்டாது என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த உத்தரவிடுமாறு, ஜி.எஸ். மணி என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் அமர்வில் இன்று (மே 9) நடைபெற்றது.

வழக்கு விசாரணை தொடங்கியதும், தேசிய கல்விக் கொள்கை மீதான அக்கறை குறித்து நீதிபதிகள் மனுதாரரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, தற்போது தில்லியில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தனக்கு தமிழக அரசின் இத்தகைய கொள்கையால் ஹிந்தி கற்றுக்கொள்வதில் சிக்கல் இருப்பதாக, அவர் தெரிவித்தார்.

அதற்கு, `உங்களுக்கு வேண்டுமென்றால் ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள்’ என்று கூறிய நீதிபதிகள், `இத்தகைய கொள்கைகளை நடைமுறைப்படுத்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32-ன் கீழ் மாநிலங்களுக்கு உத்தரவிட முடியாது’ என்று கூறி வழக்கறிஞர் ஜி.எஸ். மணியின் பொது நல வழக்கை தள்ளுபடி செய்தனர்.

குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டால், மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32-ன் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in