
Indian Coast Guard rescues crew members from US boat: அந்தமான் நிக்கோபார் தீவுகளின் கடைகோடிப் பகுதியான இந்திரா பாயிண்டிற்கு தென் கிழக்கே இருக்கும் கடல் பகுதியில், ஒரு அமெரிக்க படகில் தத்தளித்துக்கொண்டிருந்த இருவரை இந்திய கடலோர காவல்படை மீட்டுள்ளது.
இந்திய கடலோர காவல் படையின் எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`இந்திரா பாயிண்ட் அருகே முழுமையான உந்துவிசை செயலிழந்த நிலையில் இருந்த அமெரிக்க படகான `சீ ஏஞ்சலில்’ இருந்த இருவரை காப்பாற்ற, பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடலை இந்திய கடலோர காவல்படையின் ராஜ்வீர் கப்பல் துணிச்சலுடன் எதிர்கொண்டது.
ஜூலை 10, 2025 அன்று 11.57 மணிக்கு போர்ட் பிளேரில் உள்ள இந்திய கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு, இந்திரா பாயிண்டிலிருந்து 52 கடல் மைல்கள் தென்கிழக்கில் சிக்கித் தவிக்கும் ஒரு அமெரிக்கர் மற்றும் ஒரு துருக்கியர் அடங்கிய குழுவினருடன் கூடிய சீ ஏஞ்சல் படகு குறித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து ஒரு துயர எச்சரிக்கையை கிடைக்கப்பெற்றது.
சர்வதேச பாதுகாப்பு நடைமுறை உடனடியாக செயல்படுத்தப்பட்டு, இந்திய கடலோர காவல்படையின் ராஜ்வீர் கப்பல் மீட்பு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது. அங்கு சென்றதும், பாய்மரம் துண்டிக்கப்பட்டு உந்துவிசை அமைப்பில் கயிறுகள் சிக்கிய நிலையில் படகு கண்டுபிடிக்கப்பட்டது.
மாலை 18.50 மணிக்கு சீ ஏஞ்சல் இழுத்து வரப்பட்டு, ஜூலை 11, 2025 அன்று காலை 8.00 மணிக்கு காம்ப் பெல் விரிகுடாவுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த மாதம் தனுஷ்கோடிக்கு அருகே, கடலுக்கு நடுவே அமைந்திருந்த மணல் திட்டில் சிக்கியிருந்த மூன்று இலங்கை நாட்டவர்களை இந்திய கடலோர காவல்படை மீட்டது.