

பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட உள்ளதை உறுதி செய்து பதிவு வெளியிட்டுள்ளார்.
பிஹார் மாநிலத்தில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய நாள்களில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், பாஜக 89 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து ஆட்சியைத் தக்க வைத்த நிதிஷ் குமார், கடந்த ஆண்டு நவம்பர் 20 அன்று முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார். 2005 முதல் தொடர்ந்து பிஹார் மாநிலத்தின் முதலமைச்சராக 20 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார் நிதிஷ் குமார்.
மாநிலங்களவை உறுப்பினர் ஆகும் நிதிஷ் குமார்
இதற்கிடையில் தற்போது நாடாளுமன்ற மக்களவையில் காலியாக உள்ள 37 இடங்களுக்கான தேர்தலில், பிஹார் மாநிலம் சார்பாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். பிஹார் மாநிலத்தைப் பொறுத்தளவில் ஐந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இதற்கான போட்டியில் ஏற்கெனவே பாஜக தேசியத் தலைவரான நிதின் நபினை வேட்பாளராக பாஜக தலைமை அறிவித்துள்ளது. இதையடுத்து ஐக்கிய ஜனதா தளம் சார்பில் நிதிஷ் குமார் போட்டியிடவுள்ளார்.
நிதிஷ் குமாரின் பதிவு
இது தொடர்பாக நிதிஷ் குமார் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக நீங்கள் உங்கள் நம்பிக்கையையும் ஆதரவையும் என்னுடன் தொடர்ந்து வைத்திருந்தீர்கள். அதன் பலத்தால் தான் நாங்கள் பிஹாரின் மற்றும் உங்கள் அனைவரின் சேவையை முழு நம்பகத்தன்மையுடன் செய்து வந்தோம். உங்கள் நம்பிக்கை மற்றும் ஆதரவின் வலிமை தான் இன்று பிஹார் வளர்ச்சி மற்றும் கௌரவத்தின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது. இதற்காக முன்பும் நான் பலமுறை உங்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறேன். எனது பொது வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்து பிஹார் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நாடாளுமன்றத்திலும் உறுப்பினராக வேண்டும் என்று நான் விரும்பினேன். எனவே, இந்த முறை மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். உங்களுடனான என் இந்த உறவு எதிர்காலத்திலும் தொடரும் என்று நான் உங்களிடம் முழு நேர்மையுடன் உறுதியளிக்க விரும்புகிறேன். உங்களுடன் இணைந்து வளர்ச்சியடைந்த பிஹாரை உருவாக்கும் உறுதி முன்பு போலவே நிலைத்திருக்கும். புதிதாக அமையும் அரசுக்கு என் முழு ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
பிஹாரின் அடுத்த முதலமைச்சர் யார்?
மாநிலங்களவை தேர்தலில் பிஹாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதில் ஒன்றில் நிதிஷ்குமாரும் மற்றொன்றில் மத்திய அமைச்சர் ராம்நாத் தாக்கூரும் போட்டியிட உள்ளனர். மாநிலங்களவைக்குப் போட்டியிட உள்ளதால் நிதிஷ் குமார் முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறார். அடுத்த முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்பார் என்றும், நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் துணை முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது. மேலும், நிதிஷ் குமார் விரைவில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"I seek to become member of Rajya Sabha,": Nitish Kumar makes it official