
காங்கிரஸ் கட்சி சார்பில் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்களவைக்குத் தேர்வாகியுள்ள கௌரவ் கோகாய், மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கேரளாவில் இருந்து எட்டாவது முறையாக மக்களவைக்குத் தேர்வாகியுள்ள காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் மக்களவை தலைமைக் கொறடாவாகவும், தமிழக எம்.பி. மாணிக்கம் தாக்கூர், பீஹார் எம்.பி. முஹம்மது ஜாவேத் ஆகியோர் கொறடாக்களாகவும் காங்கிரஸ் கட்சியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் `நடுநிலை தவறாத வகையில் மக்களவை செயல்பட வேண்டும் என்றும், தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை’ என்றும் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார் கௌரவ் கோகாய். கௌரவ் கோகாய் அளித்த பேட்டியின் சுருக்கம்:
`மக்களவை நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று நினைக்கிறோம். கடந்த கூட்டத்தொடரில் எங்கள் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியது மக்களவையில் நீக்கப்பட்டது துரதிஷ்டவசமானது. இப்போது வரை அவை ஏன் நீக்கப்பட்டது என்று எங்களுக்குத் தெரியாது. பாஜக மக்களிடையே பொய்களைப் பரப்பி வருகிறது. இதற்கு மக்கள் பத்ரிநாத்தில் பதிலடி கொடுத்துள்ளனர்.
ஹிந்துக்கள் வன்முறையாளர்கள் அல்ல, சக்கிவாய்ந்தவர்கள். அவர்கள் தங்கள் சக்திகளை தவறான வழியில் பயன்படுத்தமாட்டார்கள். ஒரு ஹிந்து சத்தியத்தின் வழியில் நடப்பான்.
(பட்ஜெட் தொடர்பாக) பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. அம்பானி மற்றும் அதானிக்கு பிரதமரிடம் நேரமிருக்கிறது, ஆனால் ஏழைகளுக்கும், மத்திய வர்க்கத்தினருக்கும் அவரிடம் நேரமில்லை. பணவீக்கமும், வேலைவாய்ப்பின்மையும் (நாட்டில்) தொடரும். பிரதமருக்கு இத்தாலி, பிரான்ஸ் மற்றும் அம்பானி திருமணத்தில் கலந்து கொள்ள நேரமிருக்கிறது. ஆனால் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் அவரிடம் நேரமில்லை’.