
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தால் மும்பையின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருக்கும் நேரத்தில், நாளை (ஜூலை 26) அதிகம் முதல் மிக அதிக மழையை எதிர்பார்க்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்திய வானிலை மையம்.
மும்பையில் மட்டுமல்லாமல் பால்கர், தானே, புனே, ராய்கர், ரத்னகிரி, சிந்துதுர்க் போன்ற மஹாராஷ்டிர மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையால் புனேவில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை மட்டும் சுமார் 100 மி.மீ அளவுக்கான மழை மும்பை நகரத்தில் பெய்துள்ளது. அதிகபட்சமாக அந்தேரி பகுதியில் மட்டும் 157 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பை அடுத்து மும்பையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதை அடுத்து அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, நடைபெற்று வரும் வெள்ள மீட்புப் பணி நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
`தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை களத்தில் உள்ளன. மீட்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து இந்திய ராணுவத்திடம் நான் பேசியிருக்கிறேன். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ஷிண்டே.
மேலும், `மும்பைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் மாநில அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார் முதல்வர் ஷிண்டே.