நீட் வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பரவியுள்ளதா?: உச்ச நீதிமன்றம்

சம்மந்தப்பட்ட வினாத்தாள் வங்கிகளுக்கு வினாத்தாள் செல்லும் முன்பே, அதாவது மே 3 அல்லது அதற்கு முந்தைய தேதிகளில் வினாத்தாள் கசிவு நடைபெற்றுள்ளது
நீட் வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பரவியுள்ளதா?: உச்ச நீதிமன்றம்
ANI
1 min read

கடந்த மே 5-ல் இளநிலை நீட் தேர்வு நடைபெற்றது. இதில் நடந்த வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று (ஜூலை 22) காலை 10.30 மணி அளவில், நீட் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரிக்கத் தொடங்கியது. வழக்கு விசாரணையின்போது, `நீட் வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பரவியுள்ளதா’ என்று கேள்வியெழுப்பினார் தலைமை நீதிபதி சந்திரசூட்.

வழக்கு விசாரணையின்போது `நீட் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் சிலரின் வாக்குமூலத்தை வைத்துப் பார்த்தால் பீஹார் மாநிலத்தின் பாட்னா உள்ளிட்ட இரண்டு இடங்களில் நீட் வினாத்தாள் கசிவு நடந்தது உறுதியாகியுள்ளது.

நீட் தேர்வு நடந்த மே 5-க்கு முந்தைய நாள் மாலையில் அவர்களுக்கு வினாத்தாள் கிடைத்தது என்று கைது செய்யப்பட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு பீஹாரின் இரு பகுதிகளில் மட்டும் நடந்துள்ளதா அல்லது நாடு முழுவதும் பரவியுள்ளதா என்று உறுதி செய்வது அவசியம்’ என்றார்.

நீட் வினாத்தாள் ரகசியமான முறையில் அச்சடிக்கப்பட்டு வினாத்தாள் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இது குறித்துப் பேசிய மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நரேந்திர ஹூடா, `சம்மந்தப்பட்ட வினாத்தாள் வங்கிகளுக்கு வினாத்தாள் செல்லும் முன்பே, அதாவது மே 3 அல்லது அதற்கு முந்தைய தேதிகளில் வினாத்தாள் கசிவு நடைபெற்றுள்ளது’ என்றார்

மேலும், `தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிவு நடந்ததை உறுதிப்படுத்தும் வகையில் 161 வாக்குமூலங்கள் உள்ளன. தேர்வின்போது ஏறத்தாழ 3,000 மாணவர்களுக்குத் தவறான வினாத்தாள்கள் அளிக்கப்பட்டுள்ளன’ என்ற வாதத்தை முன்வைத்தார் ஹூடா.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in