ஹரியானா: நம்பிக்கை வாக்கெடுப்பில் நயாப் சிங் அரசு வெற்றி
ஹரியானா சட்டப்பேரவையில் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.
ஹரியானாவில் பாஜக, ஜனநாயக ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது. முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்தார். மக்களவைத் தேர்தலில் ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர்கள் கூடுதல் இடங்களை ஒதுக்கக் கோரியதால் கூட்டணி முறிந்ததாக மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, சுயேச்சைகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. பாஜக மாநிலத் தலைவர் நயாப் சிங் சைனி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை மாலை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், ஹரியானா சட்டப்பேரவையில் நயாப் சிங் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் நயாப் சிங் சைனி வெற்றி பெற்றார்.
90 உறுப்பினர்கள் கொண்ட ஹரியானா சட்டப்பேரவையில், பாஜக 41 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இது தவிர, 6 சுயேச்சை உறுப்பினர்கள் மற்றும் ஹரியானா லோகித் கட்சியைச் சேர்ந்த ஒற்றை உறுப்பினரின் ஆதரவை பாஜக பெற்றுள்ளது.