
பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு வழங்கியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டில், ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் உள்பட இந்தியாவைச் சேர்ந்த ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு உதவியாகக் கூறப்படும் இந்த வலையமைப்பு ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்கள் முழுவதிலும் பரவியுள்ளதாகவும், பலர் தகவல் அளிப்பவர்களாக செயல்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்குத் தகவல்களை அளித்துள்ள குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஜோதி மல்ஹோத்ரா முக்கியமானவர். இவர் `டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மூலம் விசா பெற்று அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டதாக இந்திய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த பயணத்தின்போது, புது தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் எஹ்சான்-உர்-ரஹீம் என்ற டேனிஷ் உடன் ஜோதி நெருங்கிய உறவுகளை வளர்த்துக்கொண்டார் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் உளவுத்துறையைச் சேர்ந்த பலரை ஜோதிக்கு டேனிஷ் அறிமுகப்படுத்தியுள்ளார்.
வாட்ஸ் அப், டெலிகிராம், ஸ்னாப்சாட் போன்ற செயலிகள் மூலம், ஷாகிர் என்றழைக்கப்படும் ராணா ஷாபாஸ் உள்ளிட்ட பாகிஸ்தான் உளவுத்துறையைச் சேர்ந்தவர்களுடன் ஜோதி தொடர்பில் இருந்துள்ளார். ராணாவின் கைபேசி எண்ணை அவர் `ஜாட் ரந்தாவா’ என்று சேமித்து வைத்திருந்தார்.
இந்தியாவிலுள்ள இடங்கள் பற்றிய முக்கியமான தகவல்களை அவர்களுடன் ஜோதி பகிர்ந்துகொண்டதாகவும், பாகிஸ்தான் குறித்த நேர்மறையான பிம்பத்தை வெளிப்படுத்த சமூக ஊடகங்களை அவர் தீவிரமாகப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவருடன் ஜோதி நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்டதாகவும், அவருடன் இந்தோனேசியாவின் பாலிக்குப் பயணம் செய்ததாகவும் இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
பி.என்.எஸ். பிரிவு 152 மற்றும் அலுவல்முறை ரகசியங்கள் சட்டப்பிரிவு 3, 4 மற்றும் 5 ஆகியவற்றின் கீழ் ஜோதி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், எழுத்துப்பூர்வமான ஒப்புதல் வாக்குமூலம் அவரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.