ஜிஎஸ்டி வசூலில் புதிய உச்சம்: ஏப்ரலில் மட்டும் 2.1 லட்சம் கோடி வசூல்!

2023-24 நிதியாண்டில் ஜிஎஸ்டியின் மொத்த வசூல் ரூ. 20.18 லட்சம் கோடி. கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 11.7 சதவீதம் கூடுதலாக வசூலாகியுள்ளது.
ஜிஎஸ்டி வசூலில் புதிய உச்சம்: ஏப்ரலில் மட்டும் 2.1 லட்சம் கோடி வசூல்!

ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி வசூல் 2.1 லட்சம் கோடி என புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் 13.4 சதவீதமும், இறக்குமதியில் 8.3 சதவீதமும் அதிகரித்திருப்பதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டின் ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி வருவாய் 1.92 லட்சம் கோடியாக உள்ளது. கடந்தாண்டு ஏப்ரலைக் காட்டிலும் நிகழாண்டில் 17.1 சதவீதம் வளர்ச்சி காணப்பட்டுள்ளது.

மத்திய ஜிஎஸ்டி ரூ. 43,846 கோடியும், மாநிலங்கள் ஜிஎஸ்டி 53,538 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 99,623 கோடியும் வசூலாகியுள்ளன. செஸ் வசூலானது ரூ. 13,260 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது.

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மூலம் வசூலான நிதியில், ரூ. 50,307 கோடியை மத்திய ஜிஎஸ்டி-க்கும், ரூ. 41,600 கோடியை மாநில ஜிஎஸ்டி-க்கும் வழங்கவுள்ளது. இதன் மூலம், ஏப்ரல் மாதத்துக்கான மத்திய ஜிஎஸ்டியின் மொத்த வருவாய் ரூ. 94,153 கோடியாக உள்ளது. மாநிலங்களுக்கான ஜிஎஸ்டியின் மொத்த வருவாய் ரூ. 95,138 கோடியாக உள்ளது.

2023-24 நிதியாண்டில் ஜிஎஸ்டியின் மொத்த வசூல் ரூ. 20.18 லட்சம் கோடி. கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 11.7 சதவீதம் கூடுதலாக வசூலாகியுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ. 20 லட்சம் கோடி வசூலானது. மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டில் மாதந்தோறும் சராசரியாக ரூ. 1.68 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இதுவே கடந்த நிதியாண்டில் மாதந்தோறும் சராசரியாக ரூ. 1.5 லட்சம் கோடி ஜிஎஸ்டியாக வசூலாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in