
பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் குடும்பத்தினருக்குச் சொந்தமாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் விரைவில் செல்லவுள்ளன.
தற்போது மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகராக உள்ள போபால் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தனி சமஸ்தானமாக இருந்தது. இந்திய சுதந்திரத்தின்போது இதன் நவாபாக இருந்தார் ஹமீதுல்லா கான். பிரிட்டிஷ் காலனி ஆட்சி முடிவுக்கு வந்தபோது, இந்தியா பாகிஸ்தான் என இரண்டு நாடுகள் உருவாகின. அதோடு சமஸ்தானங்களின் ஆட்சி ஒழிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஹமீதுல்லா கானின் மூத்த மகளான அபிதா சுல்தான் பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்றார். ஹமீதுல்லா கானின் 2-வது மகளான சஜிதா சுல்தான், (ஹரியாணா) பட்டோடி நவாபான இஃப்திகாரி அலி பட்டோடியை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியரின் மகன் வழிப் பேரனாவார் பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் பட்டோடி.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, இங்கிருந்து பாகிஸ்தான் சென்றவர்களின் சொத்துகளை அரசுடைமையாக்கும் வகையில், `எதிரி சொத்து சட்டத்தை’ அன்றைய மத்திய அரசு இயற்றியது. இதன் அடிப்படையில் ஹமீதுல்லா கானுக்குச் சொந்தமாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை மத்திய அரசு கையகப்படுத்தம் என கடந்த 2014-ல் அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து சயிஃப் அலிகான் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில், கடந்த 2015-ல் சொத்துகளை கையகப்படுத்த இடைக்காலத் தடை விதித்தது மத்திய பிரதேச உயர் நீதிமன்றம். இந்த இடைக்காலத் தடையை விலக்கிக்கொள்வதாக கடந்த டிச.13-ல் தீர்ப்பளித்தது மத்திய பிரதேச உயர் நீதிமன்றம்.
இந்த தீர்ப்பை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்துகொள்ள சயிஃப் அலிகான் குடும்பத்தினருக்கு அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் 30 நாட்களைக் கடந்தும் சயிஃப் அலிகான் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்யாததால், ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகள் மத்திய அரசின் வசம் விரைவில் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.