
ராணுவ நடவடிக்கைகள், துருப்புகளின் நகர்வுகள் போன்றவற்றை நேரலையில் ஓளிபரப்புவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக தளங்களுக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தேசப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து செய்திகளை வெளியிடும்போது மிகுந்த எச்சரிக்கை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, ஊடகங்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியதாவது,
`தேசப் பாதுகாப்பு நலனைக் கருத்தில்கொண்டு, ராணுவம் மற்றும் பாதுகாப்பு சம்மந்தமான நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ளும்படியும், அமலில் உள்ள சட்டதிட்டங்களை கண்டிப்பான முறையில் பின்பற்றும்படியும் அனைத்து ஊடக தளங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பாக, இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புதல், காட்சிகளைப் பகிர்ந்துகொள்ளுதல், முக்கிய இடங்களில் இருந்தபடி நேரடியாக செய்திகளை வெளியிடுதல் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது.
அதிமுக்கியத்துவமான செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை முன்கூட்டியே வெளியிடுவது தேசவிரோத அமைப்புகளுக்கு உதவக்கூடும், இது பணியின் செயல்திறன் பாதிப்பது மட்டுமல்லாமல், அதில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் பாதுகாப்பையும் சேர்த்தே பாதிக்கும்.
கார்கில் போர், மும்பை தீவிரவாத தாக்குதல் (26/11), காந்தஹார் விமான கடத்தல் சம்பவம் போன்ற நிகழ்வுகளை கட்டுப்பாடற்ற முறையில் ஒளிபரப்பியது தேசிய நலன்களில் எதிர்பாராதவிதமான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது.
சட்டதிட்டங்கள் அடிப்படையிலான கடமைகளுக்கு அப்பால், கூட்டு நடவடிக்கைகள் மூலம் ஒருமைப்பாட்டை சமரசம் செய்வதோ, பாதுகாப்புப் படையினரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள் ஈடுபடுவதோகூடாது என்பதை உறுதி செய்வது, தார்மீகக் கடமையாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.