

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் மொத்தம் சவரனுக்கு ரூ. 3,000 சரிவைக் கண்டுள்ளது.
தங்கத்தின் விலை 2025 தொடக்கம் முதல் உயர்ந்துகொண்டே இருந்தது. நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வந்த தங்கத்தின் விலை, தொடர்ச்சியாக ஏறு முகத்தில் இருந்தது. ஒரு சவரன் தங்கத்தின் விலை தீபாவளிக்குள் ரூ. 1 லட்சத்தைத் தொட்டுவிடுமா என்ற கேள்வி இருந்தது.
ஆனால், கடந்த சில நாள்களாக குறிப்பாக தீபாவளிக்குப் பிறகு தங்கத்தின் விலை கணிசமாகத் குறையத் தொடங்கியுள்ளது. தங்கம் விலை குறைவதற்கு 'பிராஃபிட் புக்கிங்' ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. 'பிராஃபிட் புக்கிங்' என்பது தங்கம் விலை உச்சத்தைத் தொட்டவுடன், தங்கத்தில் செய்த முதலீடுகளை விற்று அதிக லாபத்தை ஈட்ட முனைப்பது. அண்மைக் காலமாக தங்கம் விலை உச்சத்தைத் தொட்டு வந்ததால், தங்கத்தில் செய்த முதலீடுகள் விற்கப்பட்டிருப்பது தற்போதைய விலை குறைவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் தென் கொரியாவில் வியாழக்கிழமை சந்திக்கிறார்கள். இந்தச் சந்திப்பின் மூலம் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகச் சண்டை முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது. இதன்மூலம், வரி விதிப்பு முடிவில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கும். தங்கம் விலை தொடர்ச்சியாக உச்சத்தைத் தொட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புக் கொள்கையும் முக்கியக் காரணமாக இருந்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது. இந்நிலையில், மாலையில் மேலும் ரூ. 1,800 குறைந்துள்ளது. இதன்மூலம், ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரே நாளில் இன்று ரூ. 3,000 குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ. 88,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 375 குறைந்து ரூ. 11,075-க்கு விற்பனை ஆகிறது.
In Chennai, the price of gold has dropped by ₹3,000 per sovereign in a single day.
Gold Price | Gold Rates | Gold Price Falls |