
பெங்களூருவில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தினுடைய தலைமைச் செயலர் அதிகாரி தனது 4 வயது மகனைக் கொலை செய்துள்ளார்.
கோவாவில் விடுதியில் வைத்து மகனைக் கொலை செய்தவர் சுச்சானா சேத் என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை குறித்து காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"கோவாவிலிருந்து பெங்களூரு செல்ல வாடகை காருக்கு ஏற்பாடு செய்யுமாறு விடுதி ஊழியருடன் கேட்டுள்ளார். அந்தப் பெண் விடுதியிலிருந்து புறப்பட்டவுடன் அவரது அறையை சுத்தம் செய்ய சென்றிருக்கிறார்கள். அப்போது ரத்தக் கரைகள் படிந்திருப்பதைப் பார்த்து விடுதி ஊழியர் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, காவல் துறையினர் விடுதிக்குச் சென்று ஓட்டுநர் மூலம் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அவரது மகன் குறித்து காவல் துறையினர் கேட்டபோது, கோவாவிலுள்ள நெருங்கியவரின் வீட்டில் மகன் தங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். எனினும், அந்தப் பெண் கொடுத்த முகவரி போலியானது என்பதை காவல் துறையினர் உறுதி செய்துள்ளார்கள்.
இதன்பிறகு, காவல் துறையினரின் உத்தரவுக்கு இணங்க, கார் ஓட்டுநர் காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கு அவரது பையைத் திறந்து பார்த்தபோது, அவரது மகனுடைய சடலம் இருந்தது."
இந்த வழக்கு கோவாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவா நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட பெண்ணை 6 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறைக்கு அனுமதி வழங்கியது.
4 வயது மகனைக் கொலை செய்ததற்கான காரணம் மற்றும் கொலை செய்த விதம் குறித்து வழக்கம்போல் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கொலை செய்யப்பட்ட மகனின் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "4 வயது மகன் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கிறார். தலையணை அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருளைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இதன் காரணமாகவே அவரது உயிர் பிரிந்திருக்கிறது. வெறும் கைகளால் கழுத்து நெரிக்கப்படவில்லை" என்றார்.