
ஜம்மு-காஷ்மீரில் விடுதிகள், விமான நிறுவனங்கள் உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என மத்திய சுற்றுலா அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியளித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீருக்குச் சுற்றுலா சென்ற பயணிகள் அனைவரும் பதற்றமான மனநிலையில் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இந்நிலையில் விடுதிகள், விமான நிறுவனங்களிடமிருந்து முழுக் கட்டணமும் பெற்று தரப்படும் என சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய சுற்றுலா அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியளித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"காஷ்மீரில் நிகழ்ந்த நேற்றைய துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அச்சத்தில் இருப்பது புரிந்துகொள்ள முடிகிறது. அனைவரும் தங்களுடையப் பயணத் திட்டத்தை மாற்றி அமைத்து வருவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். விமான நிறுவனங்கள், விடுதிகள் மற்றும் சுற்றுலாப் பயண ஏற்பாட்டாளர்களிடம் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் முழுக் கட்டணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது" என்று ஷெகாவத் பதிவிட்டுள்ளார்.
விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகமும் விமான நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. விமானங்கள் ரத்து செய்வது மற்றும் மறு திட்டமிடலுக்கான கட்டணங்களை, தாக்குதலால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா கூறுகையில், "சுற்றுலாப் பயணிகள் ஜம்மு-காஷ்மீரிலிருந்து புறப்படுவதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், இது வேதனையளிக்கிறது. ஸ்ரீநகரிலிருந்து வாகனங்கள் சுமூகமாகச் செல்வதை உறுதி செய்ய ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. கூடுதல் விமானங்களை இயக்க விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இணைந்து பணியாற்றி வருகின்றன. ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் - 44 போக்குவரத்துக்காகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது" என்றார் ஓமர் அப்துல்லா.