முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்
ANI
2 min read

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

இதுதொடர்பாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 92 வயதில் காலமானார் என்பதை ஆழ்ந்த இரங்கலுடன் தெரிவித்துக் கொள்கிறோம். வயது முதிர்ந்த பிரச்னைகள் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார். டிசம்பர் 26, 2024 அன்று வீட்டில் அவர் சுயநினைவை இழந்தார். வீட்டிலேயே அவரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இரவு 8.06 மணிக்கு மன்மோகன் சிங் கொண்டு வரப்பட்டார். அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டும், இரவு 9.51 மணிக்கு அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஜம்மு & காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சசி தரூர், ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

1932-ல் பஞ்சாபில் பிறந்தவர் மன்மோகன் சிங். அரசியலுக்கு வருவதற்கு முன்பு பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

1976-ல் மத்திய நிதியமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தார்.

1982 முதல் 1985 வரை மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தார். 1985 முதல் 1987 வரை திட்டக் குழு துணைத் தலைவராக இருந்தார். முன்னாள் பிரதமர் சந்திரசேகருக்குப் பொருளாதார ஆலோசகராக இருந்தார்.

1991-ல் முதன்முறையாக மாநிலங்களவைக்குள் அடியெடுத்து வைத்தார். முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சியில் மத்திய நிதியமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்தியப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய அளவில் சீர்திருத்தங்களை மேற்கொண்டவராக மன்மோகன் சிங் அறியப்படுகிறார்.

மத்திய நிதியமைச்சராக நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக 1991-ல் தாராளமயக் கொள்கை, உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயம் என மூன்று மிக முக்கிய சீர்திருத்தத்தை மன்மோகன் சிங் மேற்கொண்டார்.

1998 முதல் 2004 வரை மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

2004 முதல் 2014 வரை நாட்டின் பிரதமராக இருந்தார். மே 22, 2004-ல் முதல்முறையாக பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். 2009-ல் இதே மே 22-ல் இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.

33 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மன்மோகன் சிங், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓய்வு பெற்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in