கைது நடவடிக்கை: தில்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு

அமலாக்கத் துறை காவலிலிருந்து தான் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கைது நடவடிக்கை: தில்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதற்கு எதிராகவும், அமலாக்கத் துறை காவலுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிராகவும் தில்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தில்லி மதுபானக் கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவர் கடந்த வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை 10 நாள்களுக்குக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை சார்பில் கோரப்பட்டது. ஆனால், தில்லி சிறப்பு நீதிமன்றம் அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு 6 நாள்கள் மட்டுமே அனுமதி கொடுத்தது. மார்ச் 28-ல் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் அமலாக்கத் துறையால் தான் கைது செய்யப்பட்டதற்கு எதிராகவும், அமலாக்கத் துறை விசாரணைக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி கொடுத்ததற்கு எதிராகவும் தில்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்குத் தொடர்ந்துள்ளார். இவை இரண்டுமே சட்டவிரோதமான செயல் என அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அவசர வழக்காக விசாரிக்குமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in