கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜூ, அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் வாதிட்டார்.
அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, கைது நடவடிக்கையின் காலத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றத்திடம் தெரிவித்தார். ஜனநாயகப் பணியாற்றுவதிலிருந்து இவரைத் தடுப்பதற்காகவே இந்த நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா தீர்ப்பை ஒத்திவைப்பதாகக் குறிப்பிட்டார்.
தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். 10 நாள்களுக்கு அமலாக்கத் துறை காவலில் இருந்த கெஜ்ரிவாலை ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.