
தில்லி மதுபானக் கொள்கை தொடர்பாக சிபிஐ கைது செய்துள்ள வழக்கில் ஜாமீன் கோரி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். இவருக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் பிணை வழங்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து அமலாக்கத் துறை சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. தில்லி உயர் நீதிமன்றம், பிணை வழங்கிய சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்திவைத்தது.
தில்லி உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை காத்திருக்கலாம் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். இதைத் தொடர்ந்து, தில்லி சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கி பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைப்பதாகக் கூறி இறுதி உத்தரவைப் பிறப்பித்தது. இதனால், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்ய வேண்டிய சூழல் கெஜ்ரிவாலுக்கு நேரிட்டது. இதற்கான அவகாசத்தையும் உச்ச நீதிமன்றம் வழங்கியது.
இதனிடையே, இதே வழக்கில் கடந்த மாதம் 25 அன்று சிபிஐயால் கைது செய்யப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். இதனால், உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்பப் பெறப்பட்டது. சிபிஐ-யின் கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதுதொடர்பாக பதிலளிக்கக்கோரி சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிபிஐ கைது செய்துள்ள வழக்கில் பிணை கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, தில்லி உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வு முன்பு அவசர வழக்காக ஜூலை 5-ல் விசாரிக்கப்படுகிறது.