
1984-ல் தில்லியில் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை அறிவித்துள்ளது தில்லி ரோஸ் அவின்யூ நிதிமன்றம்.
காலிஸ்தான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த அமிர்தசரஸ் பொற்கோவிலை மீட்க பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின்பேரில், 1984 ஜூனில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. இது நடந்து சில மாதங்கள் கழித்து இரு சீக்கிய மெய்க்காப்பாளர்கள் அக்.31-ல் தில்லியில் சுட்டுக்கொல்லப்பட்டார் இந்திரா காந்தி.
இதைத் தொடர்ந்து அப்போது தில்லியில் வசித்து வந்த சீக்கியர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்த நிகழ்வின்போது, அன்றைய புறநகர் தில்லி தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் தலைமையில் ஒரு கும்பல், சரஸ்வதி விஹார் பகுதியில் ஜஸ்வந்த சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங்கைக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, சஜ்ஜன் குமார் மீது தொடரப்பட்ட குற்ற வழக்கு மீதான விசாரணை, தில்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை கடந்தாண்டு டிசம்பரில் நிறைவு பெற்ற நிலையில், கடந்த பிப்.12-ல் தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் சஜ்ஜன் குமார்.
இந்நிலையில், இந்த குற்ற வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி இன்று (பிப்.25) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான மற்றொரு குற்ற வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளார் சஜ்ஜன் குமார்.