தேர்தல்களில் கருப்புப் பணத்தை ஒழிக்கவே தேர்தல் நிதி பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தேர்தல் நிதி பத்திரங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:
"தேர்தலில் கருப்புப் பணத்தை ஒழிக்கவே தேர்தல் நிதி பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. விசாரணை அமைப்புகளால் விசாரணை சோதனை செய்யப்பட்ட நிறுவனங்களில் 16 நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுத்துள்ளன. இதில் 37 சதவீத நிதிதான் பாஜகவுக்குச் சென்றுள்ளது. மீதமுள்ள 63 சதவீதம் எதிர்க்கட்சிகளுக்குச் சென்றுள்ளன.
இதை வெற்றிகரமான திட்டமாகவும் பார்க்கலாம். இந்தத் திட்டத்தின் மூலமாகவே, அரசியல் கட்சிகளுக்கு யாரெல்லாம் நன்கொடை வழங்கினார்கள் என்பது தெரியவந்துள்ளது.
தேர்தலில் பணம் செலவழிக்கப்படுவதை யாராலும் மறுக்க முடியாது. என்னுடையக் கட்சியும் பணத்தை செலவழிக்கிறது. அனைத்துக் கட்சிகளும் பணத்தை செலவழிக்கின்றன.
நம்முடைய தேர்தல்களிலிருந்து கருப்புப் பணத்தை ஒழிப்பது எப்படி, வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவது எப்படி என்று ஆலோசித்து சிறிய வழியைக் கண்டுபிடித்தோம். ஆனால், இதுதான் மிகச் சரியான வழி என்று நாங்கள் கூறவில்லை" என்றார் பிரதமர் மோடி.