
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், அங்கீகரிப்பட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த 2023-2024 நிதியாண்டில் தனி நபர்கள், கார்ப்பரேட்டுகள், அறக்கட்டளைகள் வழியாகப் பெறப்பட்ட ரூ. 20 ஆயிரம் மற்றும் அதற்கு மேலான தொகைகளின் மூலம் ஒட்டுமொத்தமாக ரூ. 2,244 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது பாஜக. 2022-2023 நிதியாண்டில் பெற்ற ரூ. 742 கோடியை ஒப்பிடும்போது இது மூன்று மடங்கு அதிகமாகும்.
மேலும், ப்ரூடென்ட் எலக்டோரல் ட்ரஸ்ட் ரூ. 723.6 கோடி நிதியை பாஜகவுக்கும், ரூ. 156.4 கோடி நிதியை காங்கிரஸுக்கும் வழங்கியுள்ளது. இதே 2023-2024 நிதியாண்டில், காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 288.9 கோடி நிதி கிடைத்துள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ. 79.9 கோடி மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடையாகக் கிடைத்தது.
பிற தேசிய கட்சிகளைப் பொறுத்தவரை தேசிய மக்கள் கட்சிக்கு ரூ. 14.85 கோடியும், ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ. 11.1 கோடியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ. 7.64 கோடியும், கிடைத்துள்ளன. மற்றொரு தேசிய கட்சியான பகுஜன் சமாஜ், ரூ. 20 ஆயிரம் மற்றும் அதற்கு மேல், தங்கள் கட்சிக்கு நன்கொடை எதுவும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
மாநிலக் கட்சிகளைப் பொறுத்தவரை, தெலங்கானாவின் பாரதிய ராஷ்டிர சமிதிக்கு ரூ. 580.5 கோடியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 184 கோடியும், தெலுங்கு தேசம் கட்சிக்கு ரூ. 100 கோடியும், திமுகவுக்கு ரூ. 60 கோடியும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 6.42 கோடியும், அதிமுகவுக்கு ரூ. 3.67 கோடியும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு ரூ. 1.81 கோடியும், சமாஜ்வாதி கட்சிக்கு ரூ. 46 லட்சமும் கிடைத்துள்ளன.