மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார்.
2022 நவம்பரில் மத்திய அரசின் செயலாளராக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டவர் அருண் கோயல். 2027-ம் ஆண்டு வரை அருண் கோயலுக்குப் பதவிக் காலம் உள்ள நிலையில் தனது பதவியைத் திடீரென அவர் ராஜினாமா செய்துள்ளார். அருண் கோயலின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மூன்று உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள். ஒருவர் தலைமைத் தேர்தல் ஆணையர். மற்ற இருவரும் தேர்தல் ஆணையர்கள்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தற்போது இரு தேர்தல் ஆணையர்களின் பதவிகள் காலியாக உள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே தற்போது பதவியில் உள்ளார். இதையடுத்து தேர்தல் ஆணையர்களைப் பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு விரைவில் தேர்வு செய்யவுள்ளது.