மக்களவைத் தேர்தல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
நாடு முழுக்க மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ல் நடைபெற்றது.
கேரளம், கர்நாடகம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரம் என 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் ஏப்ரல் 26-ல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 மக்களவைத் தொகுதிகளில் இன்று நடைபெற்றது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
இந்நிலையில் 8 மணி நிலவரப்படி 61.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அசாமில் அதிகபட்சமாக 75.26 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மஹாராஷ்டிரத்தில் 54.77 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
வாக்குப்பதிவு விவரம்:
அசாம் - 75.26%
பிஹார் - 56.55%
கர்நாடகம் - 67.76%
மத்தியப் பிரதேசம் - 63.09%
உத்தரப் பிரதேசம் - 57.34%
சத்தீஸ்கர் - 66.99%
மேற்கு வங்கம் - 73.93%
மஹாராஷ்டிரம் - 54.77%
குஜராத் - 56.76%
கோவா - 74.27%
தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டயூ - 65.23%