தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 9-வது முறையாக அழைப்பாணை அனுப்பியுள்ளது.
மார்ச் 21-ல் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தில்லி மதுபானக் கொள்கையை (2021-22) வகுத்ததிலும், செயல்படுத்தியதிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்தக் கொள்கை கைவிடப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் முறையே சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
தில்லி முதல்வரும், ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணைகள் அனுப்பியது. எனினும், அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. ஐந்தாவது அழைப்பாணைக்குப் பிறகும் அவர் நேரில் ஆஜராகாததால், தில்லி நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 3-ல் அமலாக்கத் துறை சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இதன்பிறகு அனுப்பப்பட்ட மூன்று அழைப்பாணைகளுக்கும் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகவில்லை. அமலாக்கத் துறை அனுப்பிய 8 அழைப்பாணைகளும் சட்டவிரோதமானது, அரசியல் உள்நோக்கம் உடையது என்றார் கெஜ்ரிவால்.
இதனிடையே, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் சனிக்கிழமையன்று நேரில் ஆஜரானார். அப்போது அமலாக்கத் துறையின் அழைப்பாணைகளைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாத வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கியது. மேலும், அமலாக்கத் துறை அழைப்பாணைகளுக்கு மதிப்பு கொடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறும் நீதிமன்றம் கெஜ்ரிவாலை அறிவுறுத்தியது.
இந்த நிலையில், தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 9-வது முறையாக அழைப்பாணை அனுப்பியுள்ளது. மார்ச் 21-ல் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.